கவிதை: எழுச்சிக் கவிஞன் பொன்.நாவலன் 29.9.2014
வே.ம.அருச்சுணன்
தன்மானக் கவிஞருள்
பொன்னான கவிஞன் பொன்.நாவலன்
சொந்தங்களைவிட சந்தங்களை
அதிகம் நேசித்தவன்
சந்தக்கவிஞராய் முகம் காட்டியவன்
எழுச்சியையும் மறுமலர்ச்சியையும்
தொய்வில்லாமல் தெளித்தவன்.................!
சுரதாவை வாசித்தவன்
பாரதிதாசனாய் உருவெடுத்தவன்
இனமானக் கவிஞனாய்
ஒற்றுமையில் மக்கள் வாழ்ந்திட
நெருப்பாய்க் கவிதைகள் தந்தவன்...............!
நோய் வந்த போதும்
உந்தன் எழுத்துப் பயணம்
ஒருபோதும் நின்றதில்லை
மேடையில் கவிமுழக்கம்
கடுகளவும் குறைந்ததில்லை
ஏடுகளில் எழுதுவதும்
வானொலியில் கவி பாடுவதும்
நிற்கவில்லை............!
கிழவனையும் வாலிபனாக்கும்
உந்தன் கவிதைகள்
சமூகத்தை வழிநடத்தும்
எதிர்காலம் சிறக்கும் வரை
போராடச் செய்யும்................!
இனிய சொல்லும் அடக்கமும்
மனிதரை மதிக்கும் பண்பும்
உனது அடையாளங்கள்
எளிமையான வாழ்வும்
இன்னாது கூறலும் உன்னை
பண்பட்ட மனிதனாய்க்
கண்டோம்..........!
வீண் சவடால் என்றும்
கனவிலும் இல்லை
தோட்டத்தில் பிறந்து
ஏழ்மையில் உழன்றும்
நெறிதவறா உத்தமர் நீயன்றோ
வாழ்ந்த காலம் சிறிதே
சாதனைகளோ பெரிது..........!
நூல்கள் பலவும் வெற்றி
முழக்கமிட வெளீயீடு கண்டவன்
சென்ற பின்னும் உன்
பெயரைத் தவறாமல் சொல்லும்
இந்த இலக்கியக் குழந்தைகள்
வியக்கும் வண்ணம் உலகில்
புகழைப் பரப்பும் பொன்.நாவலனே
சாதிக்கப் பிறந்தவன்
சாதனைகள் புரிந்திட்டே
நெடும் பயணம் சென்றுவிட்டீர்
நா பலம் கொண்டவனே
மனித மனங்களில் என்றும்
நிலையாய் உயர்ந்தே நிற்பாய்
மலேசிய இலக்கிய உலகம்
ஆழமாய் நினைத்து மகிழும்
வாழ்வீர் பல்லாண்டு.............!
கருத்துகள்
கருத்துரையிடுக