சிறுகதை: “ 13 ”
வே.ம.அருச்சுணன்
“முனுசாமி....முனுசாமி...! ”
“அட....மாரிமுத்துவா....? என்னப்பா.....சவுக்கியமா...?” மனைவிக்கு
உதவியாக சனிக்கிழமை சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த முனுசாமி தன் கையில் வைத்திருந்த கூடையை மனைவியிடம்
கொடுத்துவிட்டு அழைத்த நண்பனை நோக்கிச் செல்கிறார் முனுசாமி.
“நல்ல சவுக்கியமா இருக்கேன் முனுசாமி.....!” சந்தித்து பல
வருடங்களாகியும்,தன்னை நினைவில் வைத்திருக்கும் நண்பனை
நோக்கி ஆவலுடன் செல்கிறார் மாரிமுத்து.
“சௌக்கியத்துக்கு என்னப்பா குறை மாரிமுத்து....?ஆண்டவன்
புண்ணியத்தால நான் நல்லா இருக்கேன்...!” முனுசாமி தன் பால்ய நண்பனைக் கண்ட
மகிழ்வில் அவரைக்கட்டிப் பிடித்துக் கொள்கிறார் மாரிமுத்து.நெருக்கத்தைப்
பார்க்கும் போது அவர்களிடையே நிலவும் உண்மையான நட்பின் ஆழம் பட்டவர்த்தனமாகத்
தெரிகிறது.
“முனுசாமி....நீங்க எங்க இருக்கீங்க?” ஆவலுடன்
கேட்கிறார் மாரிமுத்து.
“தாமான் செந்தோசாவில்....தொரை வீட்டுக்கருகில்தான்
என் வீடு இருக்கு மாரிமுத்து....!”
“எந்த தொரையைச் சொல்றீங்க.....?” விளங்காமல்
கேட்கிறார் முனுசாமி.
“என்ன முனுசாமி அப்படிச் சொல்லிட்டிங்க....? பல வருசமா
இன்சுரன்ஸ் தொழில் செய்யிறாரு. எம்.ஏ.தொரைன்னு சொன்னா கிள்ளான் வட்டாரத்தில் அவரை எல்லாருக்கும்
தெரியுமே”
“ஓ....இன்சுரன்ஸ்ல ஜிஎம் ஆக இருக்கிறாரே அந்தத்
தொரையச் சொல்றீங்களா.....? தமிழ் எழுத்தாளர்களின் புத்தக வெளியீடுன்னு சொன்னா....ஆயிரம்
இரண்டாயிரம்னு கொடுத்து எழுத்தாளர்களுக்கு ஆதரவு தரும் அவர் நல்ல தமிழ்மொழிப்
பற்றாளர் செருக்கு இல்லாதப் பண்பாளர்.அவர் வீட்டுக்கருகில்தான் இருக்கிறீங்களா?”விளக்கம்தருகிறார் முனுசாமி.
“ நீங்க எந்தத் தொகுதியில ஓட்டுப்போடப்போறீங்க
முனுசாமி....?”
“மாரிமுத்து.....நீங்க என்னப்பா சொல்றீங்க? தொகுதின்றீங்க....ஓட்டுன்றீங்க...நீங்க
சொல்றது எதுவும் விளங்கள...கொஞ்சம்
விளக்கமா சொல்லுப்பா முனுசாமி!”
“என்னப்பா நீங்க....!
விளங்காத ஆளா இருக்கிறே? கூடிய விரைவுல நம்ம நாட்டுல பதின்மூன்றாவது தேர்தல் நடக்கப் போவுது
முனுசாமி, நீ...வாக்காளராப் பதிஞ்சிட்டியா...இல்லையா?”
“மாரிமுத்து....உண்மையச் சொல்றேன்.....ஓட்டுபோடுறது
பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது.....!”
“முனுசாமி.... நீங்க என்னைவிட மூத்த
ஆள்ளாயிற்றே....!”
“ஆமாம் மாரிமுத்து.உன்னைவிட இரண்டு வயசு மூப்பு!”
“வயசுல மூப்பா இருந்து என்னப்பா பயன்....? ஐம்பது வயசு
ஆகியும்....இந்த நாட்டுல நடந்த பன்னெண்டு தேர்தல்ல ஓட்டுப்போடாம இவ்வளவு நாளா
இருந்திட்டியே...முனுசாமி. நீங்க சுத்த மோசம்பா....!”
“விளங்காமதான் கேட்கிறேன் மாரிமுத்து......தேர்தல்ல
ஓட்டுப்போடாட்டி என்னவாம்....?”
“ஓட்டுரிமை மூலம் நாட்டை ஆளும் அரசாங்கத்தைத்
தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்ட ஒரு குடிமகன் பேசும் பேச்சா இது?”
“மாரிமுத்து....உங்களப் போல நான் படிக்கல.கிணற்றுத்
தவளையா இதுநாள் வரையிலும் வாழ்ந்துட்டேன்பா! வெட்கமாதான் இருக்கு....!”
“முனுசாமி....நீங்க இந்த நாட்டு குடிமகன் என்ற முறையில்
ஓட்டுப்போடும் உரிமை இருந்தும் உங்கப் பொன்னான வாக்கைப் போடாமல்,இதுநாள்வரையிலும்
பொறுப்பு இல்லாமல் இருந்து பெரிய தப்புப்பா...!”
“நானும் பல தடவை சொல்லிப் பார்த்துட்டேன் ஐயா...! இவரு
கேக்கிறதா தெரியல...!”அருகிலிருந்த மனைவி இவ்வாறு கூறியதும்,முனுசாமிக்கு
மிகவும் சங்கடமாகப் போய்விடுகிறது.
“இப்ப நான் என்ன செய்யட்டும்....சொல்லுங்க மாரிமுத்து?” பரிதாபமாகக்
கேட்கிறார்.
“தேர்தல் வர இன்னும் சில மாதங்களே இருக்கு...வாக்காளர்களாகப்
பதிவு பண்ண இன்னும் அவகாசம் இருக்கு...முனுசாமி நீங்க என்ன செய்யிறீங்க ...நாளை காலை உன்னுடைய தாமான்ல
இருக்கிற தபால் நிலையத்திலப் போய்க்கேட்டா அங்கு பணியில இருக்கிறவங்க முழுவிபரம்
தருவதோடு வாக்காளராவும் உங்கள உடனே பதிஞ்சுக்குவாங்க....”
“அப்ப....வர்ர பதின்மூன்றாவது பொதுத் தேர்தல்ல நான்
கண்டிப்பா ஓட்டுப்போடலாமுனு சொல்லுங்க மாரிமுத்து?”
“உங்களைப் போன்ற வாக்காளர்கள் போடும் வாக்கிலத்தானே
இந்த நாட்டின் தலைவிதியே அடங்கி
இருக்கு...!”மாரிமுத்து தொலைநோக்காகக் கூறுகிறார்.
நிச்சயமாக
முனுசாமி தன் மனைவியை அழைத்துக் கொண்டு நாளை வேலையினின்றும் விடுப்பு எடுத்துக்
கொண்டு ஓட்டாளராகப் பதிவு செய்யப்போகிறார் என்பதை உறுதியாக நம்புகிறார்.முனுசாமி
தன் மனைவியுடன் செல்வதைக் கண்டு புன்னகைக்கிறார் மாரிமுத்து.அரசியல் கட்சி ஒன்றில்
முக்கியப் பொறுப்பிலுள்ள மாரிமுத்து, அவர் சந்திக்கும் தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
விளக்கங்களைக் கொடுத்துப் பலரை வாக்காளர்களாகப் பதிவு செய்து வருவது வழக்கமாக்கிக் கொள்கிறார்.
நம்மவர்களில்
பலர் வாக்காளர்களாகப் பதிந்து கொள்வதில் இன்னும் அசட்டையாக இருப்பது
மாரிமுத்துக்கு வேதனையாக இருந்தது! அதிலும்,படித்தவர்களிடையேகூட ஒருசிலர் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளாமல் மெத்தனப்போக்கைக்
கடைபிடிப்பது மாரிமுத்துவுக்கு எரிச்சலாக இருக்கும்.
“மாரிமுத்து....நீங்க சொன்ன மாதிரி நானும்
மனைவியும் வாக்காளராகப் பதிவு செய்துவிட்டோம்!” வாக்காளரானதுக்கான அடையாளமாக உடன்
கொண்டு வந்திருந்த சில படிவங்களை மகிழ்ச்சியுடன் மாரிமுத்துவிடம் காட்டுகிறார்
முனுசாமி.அந்தப் படிவங்களைப் பார்த்துவிட்டு உடன் நடவடிக்கையில் முனுசாமியைப்
பாராட்டுகிறார் மாரிமுத்து.“நம்மவர்கள்….ஒவ்வொருவரும்
கண்டிப்பாகத் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொண்டால்,நமது
உரிமைகளை உறுதியாகக் கேட்டுப் பெறலாம்”
“மாரிமுத்து....நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு
உண்மை.இனியும் நாம ஒற்றுமையா இருக்கலேனா.....பிறந்த நாட்டுலையே உரிமை இழந்து
வந்தேறிகள் போல வாழவேண்டியதுதான்...!”
“இப்பத்தான்....முனுசாமி நீங்க உண்மைய உணர்ந்து
பேசுறீங்க...! வாக்காளரா இன்னும் பதியாம இருக்கிற உன்னோட நண்பர்களிடமும் நமது
உரிமைகள எடுத்துச் சொல்லி அவர்களையும் பதியச் சொல்லுங்க...!”
“அப்படியே.....செய்யிறேங்க
மாரிமுத்து.நமது உரிமையை நிலைநிறுத்த இன்னும் இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்
நமது சகோதரர்களிடம் உண்மையைப் பேசி இந்த வட்டாரத்திலுள்ள நண்பர்களைச் சேர்த்து
விடுறேன்...!”
“முனுசாமி...நாட்டில நம்ம நிலைமையைப்பற்றி
சீக்கிரமாகவே புரிந்து கொண்ட உங்களை நினைக்கும்போது,நம்மாலும் இந்த நாட்டுல மற்ற
இனத்தவர்களுக்கு நாம குறைந்தவர்கள் இல்லேனு காட்ட முடியுமுனு என்ற நம்பிக்கை
வந்திடுச்சு....!”
“நம்ம...ஒற்றுமைய இந்த தேர்தல்ல கட்டாயம்
காட்டுவோம் மாரிமுத்து...!”
“முனுசாமி....வசதி குறைந்த நம்மவர்களுக்கு,இந்தத் தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் அரிசி,பருப்பு,பால்மாவு,சமையல் எண்ணை இன்னும் அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்கிறாங்க. உங்களுக்குத் தெரிந்த ஏழ்மையில் வாழ்றவங்க யாராவது இருந்தால்,உடனே எனக்குத் தெரியப் படுத்துங்க.அவங்களுக்கும் நம்ம கிளைச் சார்பாக உதவி
செய்கிறோம்.அறுபது வயசு நிறைஞ்ச வயசானவங்க ஒவ்வொருவருக்கும் உதவித்தொகையா இருநூறு
வெள்ளி கொடுக்க ஏற்பாடு செய்திருக்கோம்....!திக்குமுக்காடிப் போன முனுசாமி, “தேர்தல்ல ஓட்டுப்போடுறவங்குக்கு இவ்வளவு உதவிகளா.....? நாட்டுல இதுநாள்வரையிலும்
பன்னிரண்டு தேர்தல்கள் நடந்திருக்கு.ஆனா....இந்த
முறைதான் ஓட்டுப்போடும் மக்களும் கண்ணால கொஞ்சம் காசப் பார்க்கிறாங்க. கைநிறைய மளிகை
பொருள்களும் கிடைக்குது”
அண்மைய நாட்டு நடப்புகளைக் கண்டு முனுசாமி அசந்து
போகிறார்.தான் சொல்லிய செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியால் தட்டுத்தடுமாறி நடந்து செல்லும்
முனுசாமியைப் பார்த்து மௌனமாக
சிரிக்கிறார் மாரிமுத்து!
நிகழ்வு
காலை பத்து மணி என்பதால்,எட்டு மணிக்கெல்லாம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும்
வசதிக்குறைந்தவர்களுக்கு,அரிசி வழங்கும் நிகழ்வுக்காக மக்கள்
சுறுசுறுப்புடன் பெருமளவில் திரளத் தொடங்குகின்றனர். குடியிருப்பிலுள்ள
மைதானத்தில்,போடப்பட்டுள்ள
கூடாரத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசை பிடித்து
நிற்கின்றனர்.வருகையாளர் அனைவருக்கும் அரிசி வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதி
வழங்கப்பட்ட பின்னரும்கூட வரிசையில் வயதானவர்கள் மட்டுமின்றியும் இளைஞர்களும்
முண்டியடித்து வரிசையில் நிற்கின்றனர்.
காலை வெயில் சுர்ரென்று உறைக்கிறது.நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலை
எதிர்நோக்குகின்றனர்.கட்டுக்கடங்காமல் பெருகும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர்
கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.ஆயினும்,அவர்களின்
முயற்சிகள்யாவும் முழுப்பயணத்தைத் தரவில்லை!
“தலைவரே....! என்னங்க....நம்ப மக்கள் ஒழுங்கே
இல்லாமல் இப்படி தாறுமாறா நடந்து கொள்றாங்க....?” ருத்திர தாண்டவம் போடும் மக்களைக்
கண்டு பதைபதைத்துப்போகிறார் செயலாளர் சூரியன்.
“சூரியன்....உங்க சங்கடம் எனக்கு நல்லா புரியுது. மற்ற இனத்துக்காரங்களப் பாருங்க எவ்வளவு
அமைதியா வரிசையில நிற்கிறாங்க; கொடுத்தத முகம் சுழிக்காமல் வாங்கிட்டுப்போறாங்க. அவங்களால நமக்கு எந்த
இடையூறும் இல்ல....! அதோ பாருங்க அந்த சீன மாத.அவருக்கு எண்பது வயது ஆவுது.எந்தவித
ஆர்பாட்டமும் இல்லாமல் வரிசையில் அமைதியா நிற்கிறாங்க.ஆனா....நம்ம ஆள்ளுங்ககிட்ட
எதையும் சொல்ல முடியில.தலைவர்கள் சொல்றாங்களே....அமைதியா கேட்டு நடப்போம் என்று
இல்லாம....அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யிறதுலதான் குறியா இருக்கிறாங்க...!
நாம என்ன செய்ய முடியும்? ம்.....வந்த வேலைய பார்ப்போம்
வாங்க உதயா!” தன் செயலாளரின் தோளைத் தட்டிக்கொடுக்கிறார். இருவரும் தங்களின்
வேலையில் கவனம் செலுத்துகிறார்கள்.
காலை பத்து மணிக்கு பொது மக்களுக்கு அரிசி வழங்கப்படும் நிகழ்வு அந்த
தொகுதியின் அரசியல் தலைவரால் தொடங்கி வைக்கப்படுகிறது.மக்கள் வரிசையில் நின்று
அரிசிப்பைகளைப் பெறுகின்றனர்.
எதிர்பார்த்ததைவிட
உதவி பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.இது ஏற்பாட்டாளர்களுக்குப்
புதுத்தலைவலியை ஏற்படுத்தி விடுகிறது.வருகையாளர் ஒவ்வருவருக்கும் ஐந்து
கிலோஅரிசியைப் தருவதில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.பெரிய லாரிகளில் முழுமையாக
நிரப்பப்பட்ட அரிசியை கூடியிருக்கும் பொது மக்களுக்கு விரைந்து வினியோகிப்பதில்
மும்முறம் காட்டிக்கொண்டிருந்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
நண்பகலைக் கடந்த பின்பும் அரிசி வழங்கும் பணி நிறைவடையவில்லை.வழக்கத்திற்கு
மாறாக வெயில் கடுமையாக இருந்தது.வயதான சிலர் களைத்துக் காணப்படுகின்றனர்.
“எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்கிறது....! பைய
வீசுயா நாங்க எடுத்துக்குறோம்...!” முரட்டுக்குரல் ஒன்று மிக உக்கிரமுடன்
ஒலிக்கிறது.வேலை விரைவாக முடியவேண்டுமே.....என்று கருதிய வினியோகித்தவர்களில்
ஒருவர் அரிசிப்பையை அவரை நோக்கி
வீசுகிறார்.இதுவரையில்அமைதியாக நகர்ந்து கொண்டிருந்த வரிசை கடல் அலைபோல்
கட்டொழுங்கு உருகுழையத்தொடங்கியது.
“ ஐய்யோ.....! என்னை மிதிக்கிறாங்களே....என்னைக்
காப்பாற்றுங்க!” அலறல் கேட்கிறது.மிதிபட்டு ஐவர் இறந்து போன செய்தி மறுநாள்
நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வெளிவந்திருந்தது!
முற்றியது
கருத்துகள்
கருத்துரையிடுக