கவிதை: வலுவான உறவு வற்றாத கண்ணீர்
வே.ம.அருச்சுணன் – மலேசியா
விடியா காலைப் பொழுதில்
இடியாய் வந்தே
இதயத்தைத் துளைத்தே
மக்களைத் துடிக்க வைத்தே
கண்ணீர் கடலில் மிதக்கவைத்தாய்............!
இறைவா இதுவென்ன
அடுக்கான சோதனைகள்?
மாதங்கள் நான்கு நகருவதற்குள்
மற்றுமொரு சோதனையா...............?
வண்ணச்சிறகுகள் பூட்டி சிங்காரமாய்
வானில் கம்பீரமாய்
வலம் வரும் மாஸ்சே நீ
கயவர்களின் சதியால்
தூளாகி மண்ணில் சிதறியக்
காட்சிக் கண்டு மனம்
இனம்,மதம்,மொழி பாராமல்
பதறாத மலேசியர் யாருமுண்டோ...........?
உலக மக்கள் பலரை
வாஞ்சையோடு இரண்டு சிறகால்
மலேசிய மண்ணின் மணம்
நுகர்ந்திட ஆவலாய்ப் பறந்து
வந்தாய்
வஞ்சகரின் கணைகள்
உன் சிறகொன்றை
நடுவானில் சிதைத்தார் சிற்சில
வினாடிக்குள் 295 ஆத்மாக்கள்
வயல் காட்டில்
அனாதைகளாய்ப் பிணங்களாய்.....!
சுயநலம்
வினாடியில் மனிதம் அஸ்தமனம்
மூன்றாம் போருக்கு ஒத்திகையோ?
இன்னுயிர் போக்கும்
மனிதனின் அடாவடியில்
அமைதி விடைபெற்றது............!
அமைதி தேடி எங்கு சென்றாலும்
கழுகாய்த் தேடும் மனிதனிடம்
உலகம் தப்புமா
மனித உயிர்கள் தப்புமா.............?
பல்லின மக்கள் ஒற்றுமையாய்
வீருகொண்டு நிற்கின்றார்
கொலைக்காரர்களைப் பிடிப்போம்
நீதியை நிலைநாட்டுவோம்
நாம் யார் என்பதை உலகுக்கு
உரக்கமாய்ச் சொல்லிவைப்போம்
வன்முறைக்கு
இறுதிச்சடங்கைச் செய்து வைப்போம்
விழிபிதுங்கச் செய்திடுவோம்
தர்மமே வெல்லும் உலக
நீதியைப் மீண்டும் புகட்டிடுவோம்...........!
மண்ணில் மறைந்தாலும்
உயிரிலும் உணர்விலும்
கலந்துவிட்ட செல்வங்களே
ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டுகிறோம்
என்றும் உங்கள் நினைவை
சுமந்து நிற்போம்
உலக உயர்வுக்கு
நீங்கல் ஆற்றிய
பணிகளுக்கு வற்றாதக் கண்ணீரை
உதிர்த்து நிற்போம்.............!
கருத்துகள்
கருத்துரையிடுக