‘வந்தாய், வென்றாய், சென்றாய்
செழுமைமிகு செர்டாங் முத்தே’
வே.ம.அருச்சுணன்
வந்தாய், வென்றாய், சென்றாய்
நீ எடுத்த அவதாரமா?
உழைப்பு....உழைப்பு.....
உழைப்பவனே உயர்ந்தவன்
உலகுக்கு நீ உதாரணம்
எல்.முத்து நீ நல்முத்து.........!
உயிரும் உடலும்
இரத்த வியர்வையில்
தொண்டனுக்கும் நேரமுண்டு
உண்ண, உறங்க, உல்லாசம்
நேரமுண்டு, காலமுண்டு உனக்கோ
உறங்கத்திலும் வேலையுண்டு
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு
என்னே உன் நியதி......!
பொன்னை விரும்பும் பூமியிலே
தன்னை விரும்பும் மனிதனுண்டு
உன்னை விரும்பும் பிறவியுண்டு
மனிதம் விரும்பும் புத்தன் நீ
நல்லோர் சபைதனிலே
வல்லோர் பட்டியலில் முதல்வன் நீ
வாழ்வை வசப்படுத்தியக் கலைஞன்
மாசற்ற குடும்பத்தலைவன்.........!
வாழ்வில்
கட்டிடக் கலைஞனாய்ப்
பரிணாமத்தைக் கொண்டவனே
பிரமிப்பை ஏற்படுத்தியவன்
இலக்கியம் படைப்பிலும்
திகைப்பை ஏற்படுத்தினாய்
அவை என்றும் நிலைக்கும்
மலேசிய இலக்கியமாய்
தேமதுரத் தமிழோசையாய்
உலகமெல்லாம் எதிரொலிக்கும்
இரட்டைக் கோபுரமாய்
நிலைபெற்று வாழ்வாய்........!
உயர்விலும்
ஒருவரையும் மறந்ததில்லை
உறவுகளைத் தகர்த்ததில்லை
தரம் கெட்டோரை அண்டியதில்லை
நன்மக்களைப் பெற்றாய்
குறையில்லா வாழ்வு தந்தாய்
மாடிவீட்டில் வாழ்ந்தாலும்
மமதையில்லா மனிதர் நீ......!
கோவில் என்றாலும்
கல்விக்கூடம் என்றாலும்
உன் பங்கு ஓங்கி நிற்கும்
நாடியவர் உள்ளம் மகிழ்ச்சியில்
எந்நாளும் துள்ளும்........!
மலேசிய எழுத்தாளர்கள்
அவர்களின் எழுத்துகளை
உரமிட்டு வளர்த்தாய்
உனது மீளா உறக்கம்
உள்ளத்தை நறுக்கும்
எல். முத்தே; எங்களின் சொத்தே
இறவாப் புகழ் பெற்றவனே
உன் ஆத்மா சாந்தி பெறட்டும்.......!
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக