கவிதை: ஏங்கும் சுதந்திரம்
வே.ம.அருச்சுணன் – கிள்ளான்
ஐம்பத்தேழு ஆண்டுகள்
மறைந்த மாயம் தெரியவில்லை
மூன்று இனங்களின்
தொலை நோக்கு நிரந்திரமாய்
அன்னியரின் தொல்லைகள் மாய்தன………..!
ஆகஸ்டு 1957 31
கதிரவன் கண் விழிக்க
அரங்கத்தில் மக்கள்
கடலாய் நிறைந்திருக்க
பெருமிதம் நெஞ்சில் சுமந்திருக்க
சுதந்திரத்தந்தை துங்கு
மெர்டேக்கா……..மெர்டேக்கா
ஏழுமுறை சீரிய சிங்கமாய்
உணர்ச்சியின் உச்சத்தில்
சங்கநாதமாய் முழங்கிட
மக்கள் இடியாய்த் தொடர்ந்தனர்.......!
அன்றுதான்
மக்கள் முதல் முறையாக
சுதந்திரக்காற்றை ஆழமாய்ச்
சுவாசிக்கத் தொடங்கினர்………!
இனி ஏழேழு தலைமுறையும்
பிழைத்துக் கொள்ளும்
நம்பிக்கை…..நம்பிக்கை
மக்கள் முகங்கள் பூத்த
மலர்களாய் மணம் வீசின
தெருவெல்லாம் வண்ண மயிலாய் நர்த்தனம்…………!
அடிமை வாழ்வு துறந்துவிட்டோம்
மூவினமும் சமநிகராய் உய்வதற்கு
மண்ணின் மைந்தன் பிறப்புரிமை
போதுமென்றே இறுமார்ந்தே
57 ஆண்டுகள்
கண்மூடி ஒட்டளித்தே
மண்டூகமாய் வாழ்ந்துவிட்டோம்……!
2020 நோக்கி
நாடு வெற்றிப் பயணம்
வானலாவிய கட்டிடங்கள்
ஒருசாராரின் வெற்றிச் சின்னங்கள்
துரோக அரசியலின்
எச்சங்கள்…………..!
சிரித்தே கழுத்தறுத்த
மகா திருடர்கள் நீண்டு வாழ்கின்றார்
அரசியல் பிழை செய்தோருக்குக்
அறமே கூற்றாகும்
வரலாற்றையே கேலி செய்யும்
இட்லர்களின் தண்டோரா வளர்பிறை
வாசம் தாங்க முடியவில்லை…….!
இருண்ட உலகில்
சந்ததிகளின் வாழ்வு
நமக்கு சுதந்திரம் எப்போது?
மொழி,இனம் மறக்கும் நமக்கு
சுதந்திரம் எப்போது?
பிரிந்து வாழும் நம்மினம்
சுதந்திரம் எப்போது?
கருத்துகள்
கருத்துரையிடுக