புதுக்கவிதை: எங்கள் தோட்டம்
வே.ம.அருச்சுணன்
– மலேசியா
நான் பிறந்த தோட்டம்
அன்று தேனாய் இனித்தது
அங்கு வாழ்ந்தவர்கள்
யதார்த்தவாதிகள்
நேர்மை மிக்கவர்கள்
அன்பின் பிறப்பிடங்கள்
கர்ணனின்
ஆத்மாக்கள்
அகிம்சம் பேசும் மகாத்மாக்கள்
நீதியைப் போற்றும் மனுநீதிச்சோழன்
பரம்பரைகள்......!
ஓங்கி நிற்கும்
இரப்பர் மரங்களின் பசுமையை
நீரோடைகளின் தூய்மை
சலசலக்கும் குளிர்ந்த நீர்
நீரிலே நீந்தி மகிழும் மீன்கள்
ஆற்றிலே நீச்சலடிக்கும் இளசுகள்
வெள்ளத்தில் கட்டு மரங்களின் சாகசப்
பயணம்.......!
கோவில் திருவிழாக்கள்
தோட்டத்தைப் பவனிவந்து
அருள் வளங்கும் மாரியம்மன்
பக்திப் பரவசத்தில் மக்கள்
கூட்டம்......!
இரண்டு தமிழ்ப்படங்களை
ஒரே இரவில் பார்த்து
மறுநாள் தோட்டமே
உறக்கத்தில் மூழ்கிப்போகும்
இனிய நாள் தூக்க நாள்
மக்களுக்குப் பொன்னாள்…….!
விளையாட்டு மைதானத்தில்
மாலை வேளையிலே
இளைஞர்களின் வீரவிளையாட்டுகள்
பருவ மங்கைகளின்
மீன்விழிப்பார்வைகள்
கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு
ஏங்கி நிற்கும்
காளையர்களின் உற்சாகக் கூட்டம்
இருமனங்கள் இணைந்தபின்
மணமேடை கண்டு
பெரியோர்களின் ஆசியில்
வாழ்வைத் தொடங்கும்
இளைஞர் கூட்டம்
பார்த்து மகிழும் காட்சி
பரவசமன்றோ.....!
இடுகாடு இருந்த இடத்திலே
கேளிக்கை மையங்கள்
உலகமே இடுகாட்டில்
ஓடியாடி விளையாடி மகிழுது......!
நம்பத்தான் முடியவில்லை
நாம் வாழ்ந்த பூமி
கண் முன்னாடியே
கண நேரத்தில்
மாயமாகிப் போய்
வரலாறு
மறந்துவிட்டதே......!
நான் வாழ்ந்த தோட்டம் இன்று
அடிச்சுவடே
இல்லாமல் போனது
கண்கள் இரத்த ஆறாகிப் போய்
விட்டதே.....!
அந்தநாள்
மீண்டும் வருமா
இனிய தென்றல் மீண்டும் வீசுமா......?
முடிந்தது
e-mail:
arunveloo @ yahoo.com
கருத்துகள்
கருத்துரையிடுக