இளைஞர்களே
தமிழ்ச்சமுதாயத்தைக் காப்பாற்றுங்கள்
வே.ம.அருச்சுணன்
இந்நாட்டில் வாழும் இந்திய
சமுதாயம், இன்னும்சில ஆண்டுகளில் உருதெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தற்சமயம் ஏற்பட்டுள்ளது.சுயநல
மிக்க காலாவதியான அரசியல்வாதிகளால் இனி இந்திய சமுதாயத்தைக் காக்க முடியாது! இப்போது
நடைபெற்று கொண்டிருக்கும் அரசியல் கூத்தடிப்புகள் ஏற்கனவே நலிந்து
போயிருக்கும் இந்திய சமுதாயத்தை
ஓர் அணுவளவும் உயர்த்த முடியாத என்ற நிலைபாட்டைத் தெளிவாக்கியுள்ளது. இந்நிலையில், இனப்பற்று,மொழி பற்று நிறைந்த,சுயநலப்போக்கில்லா, கல்வி கற்ற தமிழ் இளைஞர்கள் அவசியம்
கருதி உடனே செயலில் இறங்க முன்வர வேண்டும்.மேலும்,தமிழ் சமுதாயத்தைக் காக்க பல்லின மக்களிடையே போட்டியிடும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள்
கருணையுடன் சாதுர்யமாகச் செயல் பட்டால் மட்டுமே இங்குத் தமிழினம் அடுத்தத் தலைமுறையிலும்
நிலைத்து நிற்கும்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற சான்றோரின் நியதியை
மறந்து திரியும் குறுகிய குணம் கொண்டத் தலைவர்கள்,சமுதாயத்தைக் கூறுபோட்டு அழிப்பதிலேயே
குறியாய் நிற்கிறார்களே தவிர,நம்பிய சமுதாயத்தைக் கரை
சேர்த்துவிடுவதில் மனமின்றி தன்னையும்
அழித்து,சமுதாயத்தின் மானமரியாதைகளையெல்லாம் குழி தோண்டி
புதைக்கும் வேலைகளில் அசுரர்களாக இருக்கின்றனர்.அரசியல் வாதிகளின் சாக்கடை
நாற்றங்களை இனியும் சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதம்
பிடிப்போருக்கு அடிவாதமே மருந்தென்றால் அதனை வழங்க இளைஞர்களின் பட்டாளம் தயக்கம்
காட்டுவதேன்? இன உயர்வுக்கு முயற்சிக்காத உதவாக்கரைகளுக்குச்
சிவப்புக் கம்பள வரவேற்பா?
5 மே 2013 ஆம் நாளில் நடைபெற்ற நாட்டின் பதின்
மூன்றாவது பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப்
பின்,கடந்த 56 ஆண்டுகளாக அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்த நிலையிலும்
இந்தியர்களுக்குச் சாதகமான நிலை உருவாகாதச் சூழலில்,ஏற்பட்ட
அவமானங்கள்,ஏமாற்றங்கள்,பகடியங்கள்,பயமுறுத்தல்கள் இன்னும் பல்வேறு துன்பங்களுக்கிடையே இந்தியர்களின் இருண்ட
வாழ்க்கை மேலும் போசமான நிலையிலும்,இன்றைய சமுகத்தலைவர்களும்,அரசியல் தலைவர்களும் நாட்டில் எதுவுமே நடக்காதது போல் பாவ்லாவுடன்
உல்லாசமாய் உலகப்பயணம் போவதுதான் வியப்பாக இருக்கிறது! இவர்களுக்கு இவ்வளவுபட்டும்
கொஞ்சம் கூட உறைக்காதோ என்று வியப்பில் மக்கள் வாய்ப்பிளக்க வேண்டியுள்ளது!
நாட்டு நடப்புகளைப் பார்க்கும் போது,தமிழர்கள்
அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைந்தாலன்றி ஒரு துரும்பைக் கூட இனி நாம் அசைக்க முடியாமல்
தோல்வியின் விளிம்பில் மக்கள் கவலைத் தோய்ந்த நிலையில் நிற்கிறார்கள்.தொடர்ந்து
பல்வேறு போராட்டங்களைச் சமூகம் நடத்திய பின்னரே இந்தியர்களின் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கின்றது.இந்தியச் சமுதாயம் கையேந்தும் இன்றைய
நிலைக்கு இதுகாறும் வழிநடத்திய அரசியல் தலைவர்கள் பதில் கூறியாக வேண்டும்! இனியும்
இந்த நிலையை மாற்றியமைக்க இளைஞர்கள் தங்களின் சக்திகள் அனைத்தையும்
ஒருமுகப்படுத்திச் சமுதாய உயர்வுக்காகப்
பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
ஒட்டுமொத்த இந்தியர்களும் அரசியல் பலத்திற்காகப் பல
முக்கியமான முடிவைகளை எடுக்க வேண்டும். ம.இ.கா.
ஏதோ தங்களின் குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக நினைத்துக் கொண்டு பஞ்சு மெத்தையில்
நீள் துயிலில் இருப்போர் விழித்துக் கொள்வது நல்லது.அரசியல் சுனாமியில் சுவடு
தெரியாமல் அவர்கள் அடித்துச் செல்லப்படுவார்கள்! அரசியல் பலமே நம் தேவைகளுக்கு வடிகாலாகும்.அரசியல்
வானில் சீனர்களின் அடிச்சுவட்டைப் பின் பற்றி அரசிடம் நம் தேவைகளைப் பெற
முந்திக்கொள்ள வேண்டும்.வீரியம் பெரிதன்று காரியமே பெரிது. எண்ணற்ற தேவைகளைச்
சமுதாய நன்மைக்காக பெறுவதில் அனைவரும் ஒன்றாய் அவசரமாக இணைய வேண்டும்.
ம.இ.கா.தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜீ.பழனிவேல்
அவர்களின் தலைமைத்துவம் இன்றைய சூழலில் மிகவும் சிறப்பாக இருக்கிறது.பிரதமரோடு
அவருக்கு நெருக்கம் இருக்கிறது.மக்கள் குறிப்பாக கட்சி உறுப்பினர்கள் அவருக்கு
முழு ஒத்துழைப்பு வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.அவர் வேண்டுவ தெல்லாம் ஒரு
தவணைக்கான மக்களின் முழுஒத்துழைப்பாகும்.ஏகமனதுடன் அவர் தேர்ந்தெடுக்க அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும்.சிறப்புடன் பணியாற்ற அவருக்கு வழிவிட வேண்டும்.
அவரது மென்மையான அணுகுமுறைகள்,கடந்த
காலங்களில் கண்கட்டி வித்தைகள் புரிந்த பந்தா தலைவர்கள் போல் இல்லாமல் நேர்மையுடன் ஒரு
தவணைக் காலத்தில் பல சாதனைகள் புரிவார் என்பதைச் சமுதாய உயர்வில் அக்கறைக் கொண்ட நல்லுள்ளங்கள்
ஒப்புக்கொள்ளும்.அவரின் சீரிய தலைமைத்துவப் பண்புகளால்,
பல மாற்றங்களையும் நன்மைகளையும் சமுதாயம் நிச்சயம் அடையும்.கட்சியையும்
ஓர் அமைதிப் பூங்காவாக மாற்றுவார்.அனைவரையும் அணைத்துச் செல்வதிலும் தனித் திறமையைக்காட்டுவார்.
இந்திய மாணவர்களின் கல்வி, இந்தியர்களின்
அடிப்படைத் தேவைகள்,
பொருளாத மேம்பாடுகள், இந்தியர்களின் சமூக
பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய
நிலையில் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேலு அவர்கள் தயார் நிலையில் இருப்பதை
மக்கள் உணர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவது இந்தியச் சமூகத்திற்கும் நாட்டுக்கும்
நல்லம் பயப்பதாகும்!
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக