புதுக்கவிதை: நேரம் வந்துவிட்டது
வே.ம.அருச்சுணன்
பிள்ளைக் குட்டி நல்லா இருக்க
ஓட்டுப்போடுவோம்
சிந்தித்து
ஓட்டுப்போடுவோம்.....!
ஐந்தாண்டுக் கொரு முறை
மறவாமல் வந்து போகும்
அதிசய ஊற்று இது
பலருக்குப் பால் வார்க்கும்
சிலருக்கு நஞ்சூட்டும்.....!
மொத்தத்தில் தேர்தல்
மனிதர்களின் மனதை
வெளிச்சம் போட்டுக்
காட்டும்.....!
மக்களின் முற்போக்கு
நல்ல தலைவர்களை உருவாக்கும்
மக்களின் பிற்போக்கு
கொடுங்கோலர்களைப்
பெருக்கும்
நல்ல தலைவர்கள்
நாட்டுக்குழைப்பர்
தீயத்தலைவர்கள்
வீட்டுக்குழைப்பவர்….!
சுயநலம் போற்றும்
இவர்கள் மக்கள் தலைவர்
என்பர்
முகமூடிகளுடன் அலையும்
இவர்கள்
சொத்துக்கும் சுகத்துக்கும்
பட்டத்துக்கும் பதவிக்கும்
ஆளாய்ப்பறக்கும் இந்த
மனிதர்கள்
பசுத்தோல் போற்றிய
புலிகள்.....!
மக்களை அடித்து தின்று
ஏப்பமிடும்
சிங்கக்குட்டிகள்
தங்களின் தேவைக்கு
மக்களின் குடிநீரைக்
குறைத்திட
குழாய் நீரை அடைத்து
'சபாஸ்' வாங்குவதில் பலே கில்லாடிகள்....!
ஒரே நாளில் ஓட்டு வாங்கி
ஐந்து ஆண்டுகள்
மண்டைக்குக் குடைச்சலைத்
தரும்
அரசியல் கலைஞர்களின்
பசப்பு வார்த்தைகளில்
மயக்கம் கொள்ளாமல்
தீர்க்கமாய் முடிவெடுப்பீர்
கண்ணீரைத் துடைக்க
கைக்குட்டை தேவையை
விலக்கிடுவோம்....!
சன்மார்க்கத் தலைவர்கள்
போய்
துன்மார்க்கத் தலைகள்
பெருகிய இந்நாளில்
ஒரு கணம் கண்ணயர்ந்தால்
ஓராயிரம் துன்பத்தில்
குடிமூழ்கிப்போயிடுவோம்.....!
அரை நூற்றாண்டாய்
பாலைவனத்தில் பயணித்தவர்கள்
பசுஞ்சோலையில் பயணம் செய்ய
வேண்டாமா.....?
வீழ்ந்தவர்கள் மீண்டும்
எழவேண்டாமா......?
கற்காலம் போய் ; பொற்காலம் பிறந்திடுச்சு
நற்காலம் தரும் சுகத்தை அனுபவிக்க
வேண்டாமா....?
ஒற்றுமைக்கு வெடிவைக்கும்
மகா தலைவர்களை
ஓட்டால் ஓரம்கட்ட
வேண்டாமா....?
எங்கோ பிறந்து
பிழைப்புக்காக
இங்கு வந்தவர்கள்
கண்கட்டி வித்தையால்
வயிற்றைக்கழுவும் இவர்கள்
இவர்களின் சகாக்கள் மட்டுமே
இந்தப் பூமிக்குச்
சொந்தமென்றால்
இந்தப் பூமியில் அவதரித்த
ஆத்மாக்கள்
வேற்றுலகவாசிகளா.....?
இந்தப் புண்ணிய பூமிக்கு
அவர்கள் அன்னியர்களா....?
நாட்டின் வளப்பத்தை
அனுபவிக்க
தகுதி அற்றவர்களா......?
கேள்விகள் கேட்கும் நேரமிது
உரிமைகள் கேட்போம் இன்றே
துணிவாய் வாக்களிப்போம்
நன்றே.....!
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக