: நன்றி
மறந்த செயல்
வே.ம.அருச்சுணன்
நூற்றிரண்டாவது துயரநாளாக நடுத்தெருவில் உயிர்
போராட்டம் நடத்தும் டெங்கில் தாமான் பெர்மாத்தாவில் அப்பாவித் தோட்டத்
தொழிலாளர்களின் இரத்தக் கண்ணீர் வடிக்கும் வேளையிலே நாட்டின் 56 ஆம் சுதந்திர
நாளையும்,செப்டம்பர் 16,மலேசியா தினத்தையும் மிகவும்
விமரிசையாகவும் பல்வேறு சாகசங்களுடன் கொண்டாடி மகிழ்ந்த ‘நம்பிக்கைவை’ பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜிப் துன் அப்துல் இராசாக் அவர்களின் கனவில் கூட
அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் தாமான் பெர்மாத்தாவின் மக்களின் துயரம் தோன்றாமல்
போனது வியப்பாக இருக்கிறது.
நம்பிக்கையோடு ஓட்டு போட்டு கடந்த 15 ஆண்டுகளாகப்
போராடியும்,மன்றாடியும் வாழ்வதற்குப் பாதுகாப்பான தரைவீடு வேண்டும் என்ற ஏழைகளின்
கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய்விட்டது.அப்பாவிகளான அத்தோட்டப்பாட்டாளிகளிடம்
நாக் கூசாமல் பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி,தேர்தலிலே
வெற்றி பெற்று அரசாங்கத்தையும் அமைத்த பின்னர் ஓட்டு போட்ட மக்களை நான்கு மாதத்திற்குள்
ஏமாற்றத்தைக் கொடுப்பது தகுமா? நீதியா?
இன்னும் ஐந்தாண்டுகளில் என்ன நடக்குமோ என்ற கிளி இப்போதே மக்களுக்குப்
பிடித்துவிட்டது.
சுதந்திரம் பெற்று 56 ஆண்டுகள் கடந்த பின்னரும்,திட்டமிட்டே
அரசாங்கம் இந்தியர்களுக்கு எதிராகச் செயல்படுவதும்,இந்தியர்களின்
வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அலட்சியமும்,இந்தியர்கள்
தங்களின் உரிமைக்காக ஒவ்வொரு முறையும்
போராடுவதும், சலுகைகளுக்காக அரசிடம் மண்டியிடுவதும்,இந்நாட்டை உயிர் மூச்சாக மதிக்கும் இந்தியர்களை மாற்றாம் தாய் பிள்ளைகளாக
நடத்தப்படுவது நீதியாகுமா? இந்நாட்டில் பஞ்சம் தேடி பிழைக்க
வந்திருக்கும் அந்நியர்களுக்கும் கள்ளக்குடியேறிகளுக்கும்கிடைக்கும் மரியாதைக் கூட
இந்நாட்டுக் குடிமக்களாகப் பல நூற்றாண்டுகளாக நாட்டின் வளச்சிக்காக உழைத்து
ஓடாகிப் போன இந்தியர்களுக்குக் கிடைக்காமல் போவது எந்த வகையில் ஞாயமாகும்?
அறிஞர் அண்ணா எழுதிய, ‘ஓர் இரவு’ எனும் தமிழ்ப்படத்தில் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமி பாடிய,பாடல் வரிகள், “ வீடு கட்டும் பாட்டாளி வீதியிலே
தூங்குகிறார்;கூடி அந்த மாடியிலே கும்மாளம் போடுகிறார்; என்ன உலகமடா?……….!” என்ற பாடல் வரிகள் தாமான் பெர்மாத்தா குடியிருப்பில்
கடந்த 102 நாட்களாகப் பிறந்த சொந்த
மண்ணிலே அனாதைகளானவர்கள் போல் கேட்க நாதியற்றோராக அல்லல் படும் மக்களுக்கு மிகவும்
பொருந்தும் வரிகளாக அமைந்துள்ளது.இந்த அவலத்திற்குத் தீர்வு காண அவ்வட்டாரத்து
டெங்கில் சட்டமன்ற உறுப்பினர்,ஷாரும் முகமட் ஷரிஸ்,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் போட்ட ஓட்டுகளில் வெற்றி பெற்று இன்று
அமைச்சராகி இருக்கும் டத்தோ அப்துல் ரஹ்மான் விரைந்து பிரச்சனைக்கு மனிதாபமுறையில்உருப்படியானத்
தீர்வினைக்காணவேண்டும்.மாறாக இந்தியர்களை மேலும் ஏமாளிகளாக எண்ணிக்கொண்டு
கடமையிலிருந்து தவற வேண்டாம்.
‘சுடும் உண்மைகள்’ வழி தினக்குரல் தலைமையாசிரியர்
திரு.பி.ஆர்.இராஜன் அவர்கள் பிராங்பெசார்,செட்ஜிலி,மெடிங்கிலி,காலவே,
தோட்டங்களிருந்து வெளியேற்றப்பட்ட400க்கும்மேற்பட்டதோட்டப்பாட்டாளிக்குடும்பங்கள்,தரைவீட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருப்பதையும், சேதமுற்ற குடியுருப்புப் பகுதியிலிருந்து பாதுகாப்பு கருதி வெளியேறி
வீதியில் கூடாரங்கள் அமைத்து பல்வேறு பிரச்சனைகளோடு வாழ்ந்துவரும் துன்பங்கள்
பற்றி மிகத்தெளிவாக கடந்த சில நாட்களாக எழுதிவருவதை வாசகர்கள் படித்திருப்பார்கள்.எனினும்,கள்நெஞ்சம் படைத்தோரின் கபடநாடகத்தால் இதுநாள் வரையில் பூதாகரமாக
எழுந்துள்ள இப்பிரச்சனைக்கு இன்றுவரை தீர்வு காணப்படாமல் மக்களின் உள்ளத்தில்
தீராத ரணத்தை ஏற்படுத்தி வருவது காலத்தால் மறுக்கப்படமுடியாத வரலாற்றுப் பதிவாகும்.
இதில் இன்னுமொரு வேடிக்கை என்றால், இந்த மக்கள்
கடந்த 102 நாட்களாகக் கூடாரத்தைக் கடந்துதான் புத்திரா ஜெயாவிற்கு செல்லும்
அமைச்சர்கள்,அரசியல் தலைவர்கள்,பொது
அமைப்புகளின் தலைவர்கள்,பிறதொண்டூழியர்கள் பாவப்பட்ட இந்த
மக்களைக் கண்டு கொண்டதாகவோ அவர்களின் பிரச்சனைக்குத்தீர்வு காண முன்வராமல்
போவதாகும்.சமூகக்கடப்பாடு கொண்டுள்ள ம.இ.கா.போன்ற அரசியல் கட்சிகள் கூட,இம்மக்களின் கூக்குரலுக்கு செவிசாய்க்காமல் யார் எப்படி போனால் என்ன,தங்களின் கட்சித்தேர்தல்தான் மிக முக்கிய என்ற மெத்தனப்போக்கில் இருப்பதுதான்.மாநில அரசும்,மத்திய அரசும் காட்டும் வானவேடிக்கையில் மக்கள் நாளும் நலிவுறுவதைக் காண
மிகவும் வருத்தமாக உள்ளது.
முன்னாள் பிரதமர் துன் மகாதிர் சொன்னது போல்,வீடுகளைக்
கட்டித்தந்திருந்தால்,மக்கள் இன்று துன்பமான நிலையில் வாழ
நேரிட்டிருக்காது.மேலும்,சதுப்பு நிலத்தில் வீடுகளைப்
பொறுப்பற்ற முறையில் கட்டித்தந்து இந்தியர்களின் உயிரோடு விளையாடுவதில் அரசுக்கு
ஏன் இவ்வளவு விருப்பம்? தோட்ட மக்கள் அமைதியுடன் வாழ்ந்த
நான்குதோட்ட மக்களை வெளியேற்றிவிட்டு மக்கள் வரிப்பணத்தில் புத்ரா ஜெயாவில் அழகிய
மாளிகை கட்டிய சொகுசாய் பிரதமர் வாழ்கிறார்.அவருடன் அமைச்சர்களும் மஞ்சள்
குளிக்கின்றனர்.வெளிநாட்டினரும் மிகவும் ஆடம்பரமாகவும் மகிழ்ச்சியாகவும்
வாழ்கின்றனர்.அதேவேளையில்,நாட்டு உயர்வுக்காக உழைத்த மண்ணின்
மைந்தர்களான தோட்ட மக்கள் நடுத்தெருவில் தினம் போராட்டம் நடத்துகிறார்கள்.இந்நிலை
இனியும் தொடரத்தான் வேண்டுமா?
நாட்டில் இந்தியர்களின் பாடு மிகவும்
திண்டாட்டமாகவே இருப்பதைக் கண்கூடாக கண்டுவருகிறோம்.சிலாங்கூரில் ஷா ஆலாம்
பட்டணத்தின்,மேம்பாட்டுக்காக சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்த புக்கிட் செலுத்தோங் ரப்பர்
தோட்டம்,சுங்கை ரெங்கம்,மிட்லண்ட்ஸ்
தோட்டம்,சுங்கை ராசா,ராசாக் தோட்டம்
இன்னும் பல தோட்ட மக்கள் முறையான குடியிருப்பு பகுதிகள்கட்டித்தராமல் சில
ஆயிரங்களை நஷ்டஈடாக மாநில அரசால் வழங்கப் பட்ட நிலையில் வெளியேற்றப்பட்ட மக்கள்
ரயில்வேதண்டவாளத்திற்கருகில் குடியேறி பல்வேறு சமூகப்பிரச்சனைகளை எதிர்நோக்கிய
வரலாறு மறக்கப்படவில்லை.
இதே போன்ற,பிரச்சனை இந்தியர்களுக்கு மட்டுமே எதிர்நோக்கி வருகின்ற நிலை தொடர்கதைதானா? இதில் விழித்துக் கொண்டவர்கள் மக்களா அல்லது நாட்டை ஆளும் அரசியல்வாதிகளா? இந்த சித்து விளையாட்டுகளின் நாயகன்களின் விளையாட்டு எப்போது ஒரு
முடிவுக்கு வரும்?
முடிவுற்றது
கருத்துகள்
கருத்துரையிடுக