எய்தவன் இருக்க அம்பை
நோவுவது ஏன் ?
வே.ம.அருச்சுணன்
காலையில் ஆவலுடன் நாளிதழ்களைத்
திறந்தாலோ,வானொலிச் செய்திகளைச் செவிமடுத்தாலோ
நெஞ்சை அதிரச்செய்யும் செய்திகள் நம் இரத்தத்தை உறைய வைக்கின்றன.தொலைக்காட்சியிலும் நமது இந்திய இளைஞர்கள் பலர் கும்பல் கும்பலாகக்
காவல் துறையினரால் சூடுபட்டு வீழ்ந்து கிடக்கும் துயரக் காட்சிகளைப் பல கோணங்களில்
விரிவாக்கி முதன்மைச் செய்திகளாகக் காட்டுகின்றன.
இவை இந்நாட்டில் வாழும் ஒட்டு மொத்த இந்தியச்
சமுதாயத்தினரைத் தலைகுனியச் செய்து வரும் விசியமாகும்.பல இனங்களைக் கொண்ட மலேசிய
மக்களிடையே இந்தியர்கள் பயங்கரவாதிகளாகவும்,தீண்டத் தகாதவர்களாகவும் கருதும் நிலையைத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது
போன்றதொரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய இளைஞர்களில் 71% குண்டர் கும்பலில் ஈடுபடுவதற்கு மூலக்காரணங்கள்
என்ன? இத்தகையச் சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திட்ட பிதா மகன்கள் யார்? எத்தகையச் சூழல்கள்
இந்திய இளைஞர்களைப் பாதகச் செயல்களில் ஈடுபடச்செய்தன? நமது
இளைஞர்களைப் படுபாதாளத்தில் ஏன் தள்ளினார்கள்? அவர்களின்
நோக்கங்கள்தாம் என்ன? இது குறித்து இந்தியச் சமுதாயம்
குறிப்பாக இளைஞர்கள் இப்போது தீவிரமாகச் சிந்திப்பது நல்லது.
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்,
ஆங்கிலேயர்களால் இந்நாட்டிற்குக்
குடியமர்த்தப்பட்ட பெரும்பாலன இந்தியர்கள்
தோட்டப்புறங்களில் குறைந்த வருமானத்தைப் பெறும் உடல் உழைப்புத் தொழிலாளர்களாகப் பல
தலைமுறைகளாக மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள்.தனியார் நிறுவனங்களுக்குத்
சொந்தமானத் தோட்டங்களில் வேலை செய்த காலங்களில் கொத்தடிமைகளாகவே இந்தியர்களின்
வாழ்க்கை துயரப் பாதையில் பயணித்தது.எந்தவொரு வம்பு தும்புகளுக்கும் சோரம் போகாமல்
தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளுக்கு முழுவிசுவாசத்துடன் இருந்ததுடன்,வாழ வேறு வழி தெரியாதச் சூழலும், பயந்த சுபாவமும்
கொண்ட இந்தியர்கள் தங்களின் சந்ததியினரையும் தோட்ட நிர்வாகங்களுக்கு அடிமைகளாகச்
சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டவர்கள் போல் வாழ்ந்தவர்கள்.
தோட்டப் புறங்களில் வாழ்க்கை அமைதியாகச் சென்று
கொண்டிருந்த இந்தியர்களின் வாழ்வில் 1970 ஆம் ஆண்டுகளில் மேம்பாட்டுத்திட்டங்களுக்காகப்
பல மாநில அரசுகள் தோட்டப்புறங்களை எடுத்துக் கொண்டன.பல அந்நிய தோட்ட முதலாளிகள்
தோட்டங்களை உள்ளூர் மக்களிடையே விற்கத்தொடங்கினர்.பெரிய நிலப்பரப்புகளைக் கொண்ட
தோட்டப் புறங்கள் சிறு சிறு தோட்டங்களாகத் துண்டாடப்பட்டன.தோட்டத்தையே நம்பி பல
தலைமுறைகளாக வாழ்ந்துவிட்ட இந்தியர்கள் தாங்கள் வாழ்ந்த தோட்டத்தை விட்டு
கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது வீதிக்கு வரவேண்டிய துர்பாக்கிய
நிலைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர்.
சிலாங்கூர் மாநிலத்தில்,ஷா ஆலாம் தொழிற்
பேட்டை உருவாக்கத்திற்காக,மிட்லண்ட்ஸ் தோட்டம்,சுங்கை இராசா தோட்டம்,புக்கிட் ஜெலுத்தோங் தோட்டம்,இராக் தோட்டம், சுங்கை ரெங்கம் தோட்டம்,சுற்றுவட்டாரத்தில் இருந்த மேலும் பல தோட்டங்களில் வாழ்ந்த தோட்ட
மக்களுக்குத் தகுந்த இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.வீடுகள் கட்டிக் கொள்ள நிலங்கள்
தரப்படவில்லை.வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள்
தோட்டத்தை விட்டு வெளியேற்ற பல தரகர்கள் மூலம்
அச்சுறுத்தப்பட்டனர்.நிர்கதியாகத் தவித்தத் தோட்ட மக்களுக்கு. உதவிக்கரம்
நீட்ட வேண்டிய நமது இந்திய அரசியல் தலைவர்கள் மாநில அரசுடன் இறுக்கமாகக்
கைகோத்துக்கொண்டு முக்கிய பங்குதாரர்களாக மாறி, மக்களை
ஏமாற்றியதுதான் இதயத்தில் ஆழமானக் காயத்தை ஏற்படுத்திவிட்டது! அதன் தாக்கம்
இன்றும் விழுதுகளாக இருக்கின்றன.
அதே சமயத்தில், மலாய்க்காரர்கள் வாழ்ந்து
கொண்டிந்த,அரசாங்கத்தின் முழு உதவி பெற்று இன்னும் பல
வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடாங் ஜாவா கம்பங்கள் மேம்பாட்டுக்காக எடுபடவில்லை.மாறாக
அங்கு வாழும் மக்களின் வசதிக்காகப் பல மேம்பாடுகளை அரசாங்கம் ஏற்படுத்தித்
தந்துள்ளது.
அச்சுறுத்தலுக்குப் பயந்து இழப்பீடாகக்
கொடுக்கப்பட்ட சிறு தொகைகளைப் பெற்றுக் கொண்டுசிலர் வேறு இடங்களுக்கு வேலைத்
தேடிச்சென்றனர்.வழியின்றி பலர், தோட்டத்தருகிலுள்ள தண்டவாளம் அருகில் கள்ளத்தனமாகக் குடியேறினர்.பல
இலட்சம் இந்தியர்களின் வாழ்க்கை தண்டவாளத்தின் அருகில் தொடங்கியது. குடிநீர்,மின்சாரம்,முறையான வீடுகள்,சுகாதாரமற்ற
சூழல்,சமூகப்பிரச்சனைகள்,பல்வேறு
நோய்களால், இப்படிப்பட்டச் சூழலில் பல தலைமுறைகளாக வாழ்ந்த
மக்கள், முறையானக் கல்வியைப் பெறாதக் குழந்தைகள்தாம் இன்று, பிரச்சனைக்
குரியவர்களாக மாறியுள்ளனர்.
இதே போன்ற சூழலில்தான்,நாட்டின்
அரசாங்கத் துறைத் தன்னகத்தே கொண்டு அதிநவீன அழகு நகராகக் காட்சியளிக்கும் ‘புத்தரஜெயா’ இடத்தில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான
இந்திய மக்களும், அவர்கள் வாழ்ந்த பிராங் பிசார் தோட்டம்
அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்த தோட்டங்களும் மேம்பாட்டுத்திட்டங்களுக்காக
எடுக்கப்பட்டு இந்தியர்கள் வாழ்ததற்கான அடையாளத்தை அழித்துவிட்டு
மலாய்க்காரர்களைக் குடியேற்றிவிட்டது அரசாங்கம். ஆயிரக்கணக்காக அங்கு வாழ்ந்த
இந்தியர்கள் மேம்பாட்டுத்திட்டங்களில் புறம் தள்ளப்பட்டுள்ளனர்.வாழ்விழந்து
தவிக்கும் இளைஞர்களில் சிலர் இன்றைய குண்டர்கும்பல் நடவடிக்கையில்
இறங்கியுள்ளனர்.முறையான கல்வியையும்,வாழ்க்கை நெறிகளையும் அவர்களுக்குப்
பாகுபாடின்றி அரசாங்கம் வழங்கி இருந்தால் இந்தியர்களிடையே நிலவும் குண்டர்
கும்பலின் தாக்கம் குறிப்பிடுமளவில் குறைந்திருக்கும்.
நம்பிய இந்திய தலைவர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற
வேண்டியவரற்றை தக்க தருணத்தில் பெற்று அக்கறையுடன் சமூதாயத்தைப் பேணிக்
காத்திருந்தால்,நிலமை இன்று இவ்வளவு மோசமாகி இருக்காது.தங்களின் நாற்காலிகளைக்
காப்பாற்றிக் கொள்வதிலேயே குண்டர்களாக உலா
வந்ததன் விளைவுதான்,இன்று சமூகத்தில் குண்டர்களின் எண்ணிக்கை
மிகுந்து போனதற்குக் காரணங்களாகும்.எய்தவன் இருக்க அம்பை நோவுவானேன்....! பாவம்
நம் இளைஞர்கள்.பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்!
இனியாகிலும்,இளைஞர்களிடையே சமுதாய நலம் பேணும் இளைய தலைமுறைகள் உருவாகட்டும்.பெரியோர்கள்
இளைஞர்களுக்கு வழிகாட்டட்டும்!
கருத்துகள்
கருத்துரையிடுக