வெளிநாட்டு நாடாளுமன்றம்
வே.ம.அருச்சுணன்
இன்றைய நடப்புகள்
நாளைய வரலாறு அல்லவா
மனத்துள் பல்வேறு பிம்பங்கள்
வியப்பில் நிழலாடுகின்றன சில
செவிகளுக்குத் தேனாகவும் பல
குளவிகளாய் காதில் புதுமனைப் புகுவிழாவை
விமரிசையாகவும் நடத்துகின்றன..........!
அருவியாய் தவழ்ந்த பூமி
அன்னியரின் படையெடுப்பால்
தடமாறிப் போனதேனோ......?
மூவினமும் சேர்ந்த பெற்ற
சுதந்திரத்தை நடுவீதியில்
தாரைவார்த்தல் முறையா……?
மலாய் மக்களுக்குச் சிறப்புவழி
வானுர்ந்த சொகுசு வாழ்வு
சீனருக்குத் தனிவழி
எதிலும் போதாதென்ற சுயப்போக்கு
தமிழருக்கு மட்டும் வாழ்வே மாயம்......!
என்னையா கொடுமை இது
பிரமனும் நம்மை சபித்துவிட்டானா
ஆள்பார்த்து ஒதுக்கிவிட்டானா......?
ஆதியிலே வந்தகுடி
காட்டையும் மேட்டையும் அழித்து
தன்னையும் இலட்சம் இலட்சமாய்
அழித்தத் தமிழனுக்குத் திருவோடு
நிரந்திரமாய் வாழ்வதோ தெருவோடு........!
கள்ளக்குடியினர் இங்கே தொழில் மேதை
அனுமதிச் சீட்டில் அரசின் கம்பீரமுத்திரை
துணிக்கடை,பழக்கடை,மளிகைக்கடை,மதுக்கடை
இன்னும்
கணக்கில்லா கடைகளெல்லாம் அன்னியர் மயமாகி
வியாபாரம் தூள்பறக்குது
வெற்றிக் களிப்பு ஓங்காரமிடுகிறது
தட்டிக்கேட்க ஆளில்லை
தமிழனுக்கோ நாதியில்லை.........!
வயிற்றுப்பாட்டுக்குத் தெருவோரமாய்
வெற்றிலைக் கடைவிரிப்புக்கு
பண்டராயா அதிரடி அனுமதி மறுப்பு
கேள்வி கேட்ட குமாருக்குப் பல்லுடைப்பு
ஜாமினில் எடுக்க
கர்பாலுக்கு அவசர அழைப்பு
நாடாளுமன்றத்தில் தீர்மானம்
குலசேகரன் தலைமையில்
பலம் பொருந்தியக் குழுவமைப்பு......!
கருத்துகள்
கருத்துரையிடுக